130☐ கனிச்சாறு – நான்காம் தொகுதி
85
பிறப்பொக்கும்!
பிள்ளை பிறந்தது; பிறக்கும் போதே
கொள்ளை அழகதன் கூடப் பிறந்தது!
உறுப்புகள் யாவும் அதனுடன் பிறந்தன.
கறுப்பு நிறமும் கூடவே பிறந்தது.
மற்றவர் பெற்ற மருத்துவ மனையில்தான்,
பெற்றெடுத் தாளதைப் பெற்ற பொற்றொடி!
“பிறந்தது ஆணா பெண்ணா” என்றனர்;
அரும்பெரும் மகிழ்வோ “டாணே” என்றாள்.
“அச்செலாம் உன்போல்” என்றனர்; அதன்பின்
உச்சி குளிர்ந்தாள்; உவகை வழிந்தது.
“பிறந்த குழந்தையின் பிறப்பென்ன” என்றனர்;
“பிறந்தது மாந்தப் பிறப்பே” என்றாள்.
"குழந்தையின் குலத்தைக் கேட்டோம்' என்றனர்;
“பழந்தமிழ்க் குல”மெனப் பாவை மொழிந்தாள்.
“அப்படி என்றால் அதுவென்ன ‘சாதி’?” -
இப்படிக் கேட்கவே எழுந்தாள் நங்கை;
“கண்ணொடு பிறந்தது; காதொடு பிறந்ததே
உண்ணும் வாயொடும் உடலொடும் பிறந்ததே;
நலத்தொடு பிறந்தது; நானறிய எந்தக்
குலத்தொடும் பிறக்கிலை; குணத்தொடும் பிறக்கிலை;
தூய்மை உடலொடும் தூய்மை அறிவொடும்
தூய்மை உளத்தொடும் தோன்றிய குழந்தைக்கு
ஏது ‘சாதி’? இழிவுயர் வெல்லாம்?
தீதிலாப் பிறப்பைத் தீப்பிறப் பாக்குகிறீர்!”
என்று மொழிந்தாள் ஏந்திழை;
நின்று கேட்டவர் நீட்டினர் நடையே!