இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 169
113
வாழ்நாள் சிறியது; வாழ்க்கையோ பெரிது !
என்றும் நினைத்திரு;
இந்நிலம் பெரிது!
குன்றமும் வானும்
கோடி ஆண்டுகள்
நின்று நிலைப்பன!
நீயோ அழிபவன்!
என்றும் இருப்பதாய்
இறுமாந்து விடாதே!
1
ஒருநாள் நம்முடல்
உலகினில் அழியும்!
திருநாள் போலத்
திரிந்த வாழ்வெலாம்
இருளுள் மூழ்கும்;
இல்லாமற் போவோம்!
அருமை உறவினர்
அழ அழ அழிவோம்!
2
பிறப்பனஎல்லாம்
பின்னொரு நாளில்
இறப்பதும் உறுதி!-
இதுவே இயற்கை!
மறப்பிலா இந்நிலை
மனத்தினுள் இறுத்திச்
சிறப்புற எண்ணவும்
செய்யவும் முனைக!
3
உன்புது வாழ்வை
உவப்புடன் நடத்து!
அன்பும் அறமுமே
அனைத்தினும் உயர்வாம்!
இன்பம் வருகையில்
எக்களிப் புறாதே!
துன்புற நேரினும்
துவண்டு விடாதே!
4