182 ☐ கனிச்சாறு – நான்காம் தொகுதி
123
படித்தவர் யாருக்கும் வெட்கமில்லை!
ஓங்கிய செல்வரின்
குழந்தைகள் ஒருபுறம்
ஓடுவர் ஆடுவர்
பந்தடித்தே!
தேங்கிய வறுமையால்
ஏழையர் குழந்தைதாம்
தேடுவர் வாடுவர்
திரிந்தலைந்தே!
இலங்கு பறவைகள்
எழில்சேர் மலர்களுள்
ஏழைகள் உண்டோ
இயம்பிடுவீர்!
விலங்குகள் வாழ்வில்
விண்ணுயர் மரங்களில்
செல்வரும் உண்டோ
விளக்கிடுவீர்!
அறிவுடை இனமென
அளக்கிறோம் பெரிதாய்!
ஐயகோ, இங்குதான்
அவலநிலை!
வறியவர் ஒருபுறம்!
வளமையர் ஒருபுறம்!
வாழ்க்கையோ பலருக்கு
வெறுமைநிலை!
அரசியல் என்கிறோம்!
பொருளியல் என்கிறோம்!
ஆருக்கு வேண்டுமிங்(கு)
அவையெல்லாம்!