196 ☐ கனிச்சாறு – நான்காம் தொகுதி
இவைதாம் இன்றைய உலகம்!
இருப்பினும் சோர்வடை யாதே!
எவை உயர் வானவை எண்ணிவா!
எல்லா நிலையிலும் உயர்வடை!
கரடுமுரு டான மலையிலும்
காவளம் கனிவளம் காணலாம்!
திருடரும் மாந்தரே! என்னினும்
மாந்தர் அனைவரும் திருடரா?
139
மடிவதோ இன்னமும்?
உரிமை முழக்கடா!
அறிவுறு நலன்களும் தேவை யில்லை-தம்பி
அன்பதும் தேவை யில்லை!
செறிவுறு பண்புகள் தேவை யில்லை-நல்ல
சிந்தனை தேவை யில்லை!
நறுவுணர் வெல்லாமும் அடிமைப் படிகளே!-நாளும்
நாளுமே உனைக்கீழ் இறக்கும்!
பெறுவது தமிழருக்(கு) உரிமை ஒன்றே!-அதைப்
பெறும் போதே அவைதாமும் சிறக்கும்!
அடிமைக்கோ அறிவென்ப தெதிரிக்கு ஆக்கம்-தம்பி
அன்பாக நடப்பதும் தேக்கம்!
மிடிமையர்க் கெதற்குப்பண் பாடுகள் எல்லாம்?-தம்பி
மேலும் மேலும் அவை தாக்கம்!
விடிவதற் குள்ளே, நீ எழுந்திடல் வேண்டும்!-தம்பி
விடியலுன் துயரினைப் போக்கும்!
மடிவதோ இன்னமும்? உரிமை முழக்கடா!-இனி
வருங்காலம் உனதுதான் நோக்கம்!