இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
98 ☐ கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி
99 ஓய்வும் பயனும்!
ஓய்வாக இருக்கையில் தம்பி - நீ
ஓவியம் வரைந்து பழகு!
தூய்மையோ டமைதி சேரும்! - நன்கு
தோன்றிடும் உள்ள அழகு!
பாக்களும் இயற்றிப் பழகு - நல்ல
பாடலைப் பாடி மகிழ்வாய்!
தாக்குறும் துன்பம் யாவும் - இசைத்
தமிழினில் மாய்ந்து போகும்!
கதைகளும் எழுதிப் பழகு - பூங்
காவினில் உலவி வருவாய்!
புதைந்திடும் அறிவு வளரும் மனம்
புதுக்கிடும் வாழ்வு பெறுவாய்!
அறிவியல் ஆய்வு செய்வாய் - நீ
அன்றாடச் செய்தி படிப்பாய்!
செறிவுறும் உன்றன் அறிவு - உளச்
செழுமையும் வலிவும் பெறுவாய்!
மருத்துவ நூல்கள் கற்பாய் - உடன்
மனநூலும் தேர்ந்து கற்பாய்!
திருத்தமெய்ந் நூல்கள் அறிவாய் - வருந்
தீமையும் பொய்யும் களைவாய்!
-1969