பக்கம்:கனிச்சாறு 5.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  145


145

மாணவர் எழுச்சிகள், புரட்சிகள்
மாந்தரின் நலம்பெற எழுகவே!


மாணவர் மனங்களோ புதுவயல்!
மற்று,அவர் செயல்களோ புதுப்பயிர்!
வீணான நினைவுகள் களைகளாம்!
புதுப்புது விளைவுதாம் பெருமையாம்!

முன்னவர் கருத்தெலாம் உரங்களாம்!
முதியவர் சொல்பவை பாயும்நீர்!
பின்னவர் இவரினும் மேம்படப்
பேசுதல், எழுதுதல் தேவையாம்!

அடித்தளம் புதுமையாய் அமைத்தலும்,
அதன்மேல் இலக்கியம், அறிவியல்,
குடித்தன வாழ்வியல், குமுகியல்,
கூர்த்திடும் பொதுவியல், பொருளியல்,

எனுமிவை யாவினும் புதுமைகள்,
ஏறிடும் சிந்தனை, விளைவுகள்
முனுமுனுப் பிலாதநல் முயற்சிகள்
முழுமையாய்த் தருவதே கடமையாம்!

மாணவர் எழுச்சிகள், புரட்சிகள்
மாந்தரின் நலம்பெற எழுகவே!
தூண்அவர்! எதிர்வரும் உலகிலே
தோற்றுக, பெரும்பயன் நலன்களே!

-1991
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/179&oldid=1444955" இலிருந்து மீள்விக்கப்பட்டது