பக்கம்:கனிச்சாறு 5.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  157


162

சொல்லினும் செயலே மேல்!


அறிவுரை மட்டிலும் போதாது - அதன்
ஆக்கச் செயலும் வேண்டும்! - வெறும்
செறிவுரை கூறிப் பயன்விளைமோ? - வினை
செய்யவும் தெரிந்திடல் வேண்டும்!

அன்புரை மட்டிலும் போதாது - அதில்
அரும்பிடும் வினைகளும் வேண்டும்! - நல்ல
தென்புரை மட்டிலும் பயன்தருமோ? - நிலை
தேற்றிடும் செயல்களும் வேண்டும்!

எழுத்துரை மட்டிலும் போதாது - அவ்
வெழுத்துகள் செயல்பெறல் வேண்டும்! - வாய்
வழுத்துரை மட்டிலும் நலந்தருமோ? - துணை
வாழவும் செய்திடல் வேண்டும்!

வழிசொலல் மட்டிலும் போதாது - நாம்
வழித்துணை ஆகவும் வேண்டும்! - பிறர்ப்
பழிசொலல் மட்டிலும் திறம்பெறுமோ? - அப்
பழியைநாம் தவிர்த்தலும் வேண்டும்!

சொல்லுதல் மட்டும் போதாது - நாம்
சொன்னதைச் செய்தலும் வேண்டும்! - வாய்
மெல்லுதல் பசியினை அடக்கிடுமோ? - உரை
மேலெனில் செயலையும் தூண்டும்!

-1982
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/191&oldid=1444967" இலிருந்து மீள்விக்கப்பட்டது