பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 157
162
சொல்லினும் செயலே மேல்!
அறிவுரை மட்டிலும் போதாது - அதன்
ஆக்கச் செயலும் வேண்டும்! - வெறும்
செறிவுரை கூறிப் பயன்விளைமோ? - வினை
செய்யவும் தெரிந்திடல் வேண்டும்!
அன்புரை மட்டிலும் போதாது - அதில்
அரும்பிடும் வினைகளும் வேண்டும்! - நல்ல
தென்புரை மட்டிலும் பயன்தருமோ? - நிலை
தேற்றிடும் செயல்களும் வேண்டும்!
எழுத்துரை மட்டிலும் போதாது - அவ்
வெழுத்துகள் செயல்பெறல் வேண்டும்! - வாய்
வழுத்துரை மட்டிலும் நலந்தருமோ? - துணை
வாழவும் செய்திடல் வேண்டும்!
வழிசொலல் மட்டிலும் போதாது - நாம்
வழித்துணை ஆகவும் வேண்டும்! - பிறர்ப்
பழிசொலல் மட்டிலும் திறம்பெறுமோ? - அப்
பழியைநாம் தவிர்த்தலும் வேண்டும்!
சொல்லுதல் மட்டும் போதாது - நாம்
சொன்னதைச் செய்தலும் வேண்டும்! - வாய்
மெல்லுதல் பசியினை அடக்கிடுமோ? - உரை
மேலெனில் செயலையும் தூண்டும்!