பக்கம்:கனிச்சாறு 5.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  47


52  குயிலே கூவாயோ?

குயிலே குயிலே கூவாயோ?
கூகூ வென்றே கூவாயோ?
பயிலும் இசைக்கே
பழங்கள் தருவேன்;
பைந்தமிழ் மணக்கக் கூவாயோ?

கருமைக் குயிலே கூவாயோ?
காதுகள் குளிரக் கூவாயோ?
அருமை இசைக்கே
அப்பம் தருவேன்;
அருந்தமிழ் வாழக் கூவாயோ?

சின்னக் குயிலே கூவாயோ?
செவிகள் குளிரக் கூவாயோ?
பன்னும் இசைக்கே
பாலடை தருவேன்;
பழந்தமிழ் சிறக்கக் கூவாயோ

சோலைக் குயிலே கூவாயோ?
சோர்வும் விலகக் கூவாயோ?
காலை இசைக்கே
கனிச்சுளை தருவேன்;
கன்னித் தமிழிசை கூவாயோ?

தனிமைக் குயிலே கூவாயோ?
தாளம் பயிலக் கூவாயோ?
இனிமை இசைக்கே
இளமுகை தருவேன்;
இன்றமிழ் வழங்கக் கூவாயோ?

பாடற் குயிலே கூவாயோ?
பண்கள் சிறக்கக் கூவாயோ?
நாடும் இசைக்கே
நளிதயிர் தருவேன்;
நற்றமிழ் மிளிரக் கூவாயோ?

-1975
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/81&oldid=1424821" இலிருந்து மீள்விக்கப்பட்டது