இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 47
52 குயிலே கூவாயோ?
குயிலே குயிலே கூவாயோ?
கூகூ வென்றே கூவாயோ?
பயிலும் இசைக்கே
பழங்கள் தருவேன்;
பைந்தமிழ் மணக்கக் கூவாயோ?
கருமைக் குயிலே கூவாயோ?
காதுகள் குளிரக் கூவாயோ?
அருமை இசைக்கே
அப்பம் தருவேன்;
அருந்தமிழ் வாழக் கூவாயோ?
சின்னக் குயிலே கூவாயோ?
செவிகள் குளிரக் கூவாயோ?
பன்னும் இசைக்கே
பாலடை தருவேன்;
பழந்தமிழ் சிறக்கக் கூவாயோ
சோலைக் குயிலே கூவாயோ?
சோர்வும் விலகக் கூவாயோ?
காலை இசைக்கே
கனிச்சுளை தருவேன்;
கன்னித் தமிழிசை கூவாயோ?
தனிமைக் குயிலே கூவாயோ?
தாளம் பயிலக் கூவாயோ?
இனிமை இசைக்கே
இளமுகை தருவேன்;
இன்றமிழ் வழங்கக் கூவாயோ?
பாடற் குயிலே கூவாயோ?
பண்கள் சிறக்கக் கூவாயோ?
நாடும் இசைக்கே
நளிதயிர் தருவேன்;
நற்றமிழ் மிளிரக் கூவாயோ?
-1975