பக்கம்:கனிச்சாறு 5.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  55


61  அவள் இசை அமுது!

அவள் 'இசை’ அமுது!
அகவை மூன்றரை!
துவளா நெஞ்சினள்!
துடிதுடிப் புள்ளவன்!

அழகிய ஓவியம்,
அவள் திருவுருவம்!
பழகிய செந்தமிழ்
பயிலும் நாவினள்!

கருவண்டு விழிகள்
கவின்நிலா ஒளிமுகம்!
திருவளர் செல்வி
தீதின்றி வாழ்கவே!

-1980


62  ஊஞ்சல் ஆடு!

ஆடு ஊஞ்சல் ஆடு!
அன்னைத் தமிழ் பாடு!
பாடுபவள்; காதிரண்டில்
பச்சை மணித் தோடு!

காற்றில் முடி ஆடி,
கைவளைகள் பாட,
ஆற்றில் அலை பாய்வதுபோல்
அங்கு மிங்கும் ஓட,
ஆடு ஊஞ்சல் ஆடு!

-1981
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/89&oldid=1424832" இலிருந்து மீள்விக்கப்பட்டது