பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 61
46
இருள் உனக்கு விடியுமா?
உன்னைப் போலக் கோடிப் பேர்கள்
ஒருங்கிணைந்து புறப்பட் டாலும்
என்னை வீழ்த்த முடியா தென்று
- தெரியுமா? அட,
மின்னைப் போலக் கதிரைப் போல
மேலெழும்பும் காற்றைப் போல்
அன்னைத் தமிழில் கரைந்து விட்டேன்;
- புரியுமா?
பொய்யைச் சொல்லிப் புளுகைச் சொல்லிப்
புழுக்கை யெல்லாம் எண்ணி னாலும்
மெய்யை வீழ்த்த முடியா தென்று
- விளங்குமா? அட,
எய்யச் சொல்லி அம்பைச் சிலரும்
எடுத்தெடுத்துக் கொடுத்திட் டாலும்,
மையக் குத்தித் தவிட்டில் அரிசி
- துலங்குமா?
பழியைச் கூறி இழிவைக் கூறிப்
பரக்க எழுதிப் பரப்பி னாலும்
வழியைத் தடுத்தென் திசையைத் திருப்ப
- முடியுமா? அட,
விழியைத் திறந்தே குழியில் விழுந்து,
விலாவ லிக்க எம்பி னாலும்
அழியச் சூழும் இருள் உனக்கு
- விடியுமா?