பக்கம்:கனிச்சாறு 7.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


57

குடியரசு நாடா இஃது?


தமிழ்நாடு கோரிக்கை எழுப்புவதால்
தான்எனக்குத் ‘தடா’வென் பீரேல்,
இமிழ்கடல்சூழ் உலகெங்கும் வாழ்கின்ற
தமிழர்மேல் ஆணையிட்டேன்!
கமழும்என் தமிழ்மொழியும் தமிழினமும்
தமிழ்நாடும் மீட்பதற்கே
அமிழும்வெஞ் சிறையினில்ஓர் ஆயிரமாண்
டிருப்பினும்நான் அகமகிழ்வேன்!

கோரிக்கை எழுப்புதற்கே சிறையென்றால்
குடியரசு நாடா இஃது?
பாருக்குள் இல்லாத வன்முறைகள்
வடநாட்டுப் பார்ப்பான் செய்ய,
பேருக்கு வளமனைக்குள் சிறைவைக்கும்
பேயாட்சி உணர்தல் வேண்டும்!
போருக்கு நமையெல்லாம் புறப்படுத்தும்
செயலிதுவாம் புரிந்துகொள்க!

-1993



58

என் பயனே!



இறைவன் திருவுளம் எதுவோ அதுவே
எனக்குமு ளம்!
இறைவன் திருவினை எதுவோ அதுவே
எனக்கும் வினை!
இறைவன் திருவிளை வெதுவோ அதுவே
என்விளைவும்!
இறைவன் திருப்பயன் எதுவோ அதுவே
என்பயனே!

-1993
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/119&oldid=1446168" இலிருந்து மீள்விக்கப்பட்டது