பக்கம்:கனிச்சாறு 7.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


81

பாவேந்தர் பாரதிதாசன்!


பாட்டுக்கு வேந்தர்
பாவேந்தர் - அவர்
பாரதிதாசன்
எனும் வேந்தர் தம்பி
ஏட்டுக்கு ஏடு
எழில்கொழிக்கும் - அவர்
எழுத்துக்கு எழுத்து
தமிழ் மணக்கும்!  (பாட்டுக்கு)

கூட்டுக்குள் ஆவி
தமிழ்என்றார் - அவர்
குரலுக்குக் குரலால்
நமை வென்றார் -நம்
வீட்டுக்கு வீடு
அவர் பாடல் - பெரும்
வீதிக்கு வீதி
அவர் புகழாம்!  (பாட்டுக்கு)

நரம்புக்கு நரம்பு
உணர்வேறும் - உயிர்
நாடிக்கு நாடி
தமிழ் ஊறும்!
கரம்புக்கு உழவாய்
மனம் உழுதார் - நல்ல
கழனிக்கு மழையாய்த்
தமிழ் பொழிந்தார்!  (பாட்டுக்கு)

இருளுக்கு ஒளியாய்
அவர் திகழ்ந்தார் - நல்ல
இயற்கைக்கு உயிராய்
எழில் கொடுத்தார்!
மருளுக்கு மருந்தாய்த்
தமிழ் விளைத்தார் - தம்பி!
மடமைக்கு எதிராய்ப்
போர் தொடுத்தார்! (பாட்டுக்கு)

-1970
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/153&oldid=1446215" இலிருந்து மீள்விக்கப்பட்டது