பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 179
139
முத்தமிழ் விழா வாழ்த்து!
மடிப்புடை, கலையா மயிர்த்தலை, ஒளிப்படப்
பிடிப்புளம், ஒழுக்கப் பிறழ்நடை என்றிவை
குடிபுகும் மாணவக் குழாமென் றிக்கால்
நொடிப்புளங் கொண்ட நல்லோர் நோயற
அடிப்படைப் பயிற்சி அரசினர்ப் பள்ளியின்
துடிப்புடை மாணவத் தோன்றல் சில்லோர்
புத்துணர் வெடுத்துப் புடையவிழ்ந் தலர
முத்தமிழ்த் தாய்க்கு முதுவிழா வெடுத்தனர்.
போலிப் புலமையும் புன்மை உள்ளமும்
கூலித் தமிழ்த் தொண்டும் கூக்குரல் வன்மையும்
மலிந்த இக்கால் மாணவ நற்குழாம்
வலிந்துயர் வடைதல் வாழ்த்துக் குரியதே.
முத்தமிழ் விழாவை முன்னின்று நடத்தும்
தித்திக்கும் நெஞ்சினார் திருவுளம் வாழிய,
எடுத்த விழாவினை இனிதே
முடித்துக் கொடுப்பள் முத்தமிழ்த் தாயே!
137
பொங்கலும் வேண்டுமோ?
மொழியுங் கவலாய்; உரிமையுங் காவாய்;
அடிமையுற்றாய்!
விழியுந் திறவாய்; செவியுந் திறவாய்;
உளந்திறவாய்;
பிழியுங் கரும்பின் நறவொடு பால்தேன்
பயந்து, சுவை
பொழியும் நறுமணப் பொங்கலும் வேண்டுமோ?
போக்கிலியே!