பக்கம்:கனிச்சாறு 7.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  27


17

கண்ணீர் நெஞ்சம்!


இறைவா! நின் அருளறஞ்சேர் பேருள் ளத்தை
இயற்கைசெயும் அசைவிலெல்லாம் நெளிவி லெல்லாம்
நிறைவாக அறிகின்றேன்; உணரு கின்றேன்;
நீள்விசும்பு, கதிர், உடுக்கள், புடவி எங்கும்
மறைவான செய்தியில்லை; அறிந்து கொள்ள
மலைப்பூட்டும் உண்மையில்லை; எனினும் ஒன்றைப்
பொறைதீர நினைக்கின்றேன்; விளக்கம் இல்லை;
‘புவி’க்குள்ளே ஏன் என்னை உலவ விட்டாய்?

பொய்மாந்தர் நடுவினிலே மெய்ம்மை பேணிப்
போராடும் நெஞ்சினையேன் எனக்குள் வைத்தாய்?
செய்வினையில் தூய்மையற்றே அறம்பே ணாத
சிறுமையினார் கூட்டத்தில் எனையேன் விட்டாய்?
வெய்யகொடும் நினைவினிலே தீப்போல் காந்தும்
வீறார்ப்பு மக்களிடை, சிறுதீங் கிற்கும்
தொய்வுற்றுச் சாத்துயரம் கொள்ளு கின்ற
தூங்காத உள்ளத்தை எனக்கேன் தந்தாய்?

கரடுமுர டாய்விளர்ந்த கறம்புக் காட்டுள்
கள்ளியெனத் திருகியுளம் முறுக்கம் கொண்ட
திருடரிடை நேர்மை, அறம், உண்மை, வாய்ந்து
தீமைக்கு நடுநடுங்க எனையேன் வைத்தாய்?
குருடரிடை விழிக்க வைத்தாய்; இருளில் விட்டாய்!
கூசுகிலா மக்களின்முன் கூச வைத்தாய்!
அருள்தவிர்ந்த கயவரிடம் அலையச் செய்தாய்!
அமைதியிலா துழலுகின்ற உளமேன் தந்தாய்?

அன்பவிந்த கல்நெஞ்சர்க் கிடையில் அன்பை
அணைகட்டித் தேக்குமொரு நெஞ்சேன் தந்தாய்?
துன்பறிந்தே எனைவிட்டு விலகு வோரின்
தொடர்பெண்ணி வருந்துகின்ற உளமேன் தந்தாய்?
முன்பிருந்து, நட்பாடி, வாய்மை பேணி
முகமலர்ந்தே, உரையாடிச், செயலில் ஒன்றிப்
பின்பிரிந்து, தலைவளர்க்கும் சிறுமை யோர்க்கும்
பிழைநினையா உள்ளத்தை எனக்கேன் தந்தாய்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/72&oldid=1446027" இலிருந்து மீள்விக்கப்பட்டது