பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 31
பகைக்குப் பகலவன்! பாவுண் தும்பி!
அன்பினுக் கினியவன்! அவனொரு தனியன்!
(வேறு)
முப்புறம் பதிந்த நோக்கில்
முரணிலா நடந்த கால்கள்!
குப்புற வீழ்தல் இல்லாக்
கொள்கையால் துவண்ட வாழ்க்கை!
செப்பமும் ஒழுங்கும் சேரச் சீர்மையும் நேர்மை பாய
ஒப்பிய கொள்கை ஒன்றால் ஒருதனி நடைய னானான்!
ஒருதனி நடையனாகி உலகெலாம் நடக்க லுற்றான்;
வருதலிற் றீமை சேரான்;
வாய்மையில் கருமை காட்டான்!
வெருதலும் குலைவு மின்றி
வினைவயப் பட்டான்; தீமை
பொருதலும் படையு மாகப்
புதுநெறி புதுக்க லானான்!
மொழிக்கென மொழிந்தான்; மக்கள்
முழுமலர்ச் சிக்கென் றார்த்தான்!
செழிக்கிலாத் தமிழர் வாழ்க்கை
செழிக்கெனக் குரல்கொ டுத்தான்!
அழிக்கிலாப் பொய்மைப் போக்கை
அழித்திடக் குரல்மேல் ஏற்றி
விழிக்கிலாத் தமிழர் பாங்கில்
விடிந்ததிங் கெழுக வென்றான்!
மறத்தினும் மறத்த நெஞ்சம்!
மலையினும் நிலைத்த கொள்கை!
அறத்தினும் சிறந்த போக்கே!
ஆழியின் அகன்ற அன்பு!
திறத்தினும் தெரித்த சொற்கள்!
தீமைக்குக் கூசும் மெய்வாய்!
புறத்தினும் இனிய ஆகம்!
புலப்பினும் அணைக்கும் கைகள்!
இருளில் நடந்த கால்கள்!
இமைப்பிலா விழித்த கண்கள்!
மருளுக்கு மருண்டான் அல்லன்!
மயக்கினில் திகைத்தான் அல்லன்!