பக்கம்:கபாடபுரம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

கபாடபுரம்


இரவில் புறவீதி வழியே வானளாவி நிற்கும் கபாடங்களை நோக்கி அவர்கள் நடந்து சென்ற காட்சி பெருமலையை எதிர்த்துச் சிறு கருங்குன்றுகள் விரைவாக உருண்டு செல்வது போலிருந்தது.

"எதைச் சுமந்துகொண்டு இப்படி கபாடங்களை நோக்கிப் போகிறார்கள் இவர்கள்? அடைத்துவிட்ட கபாடங்களை இவர்களுக்காக இனி யார் திறக்கப் போகிறார்கள்? உன்னால் ஏதாவது அதுமானம் செய்ய முடிகிறதா?" என்று முடிநாகனைக் கேட்டான் இளையபாண்டியன். உடனே பதில் கூற முடியாமல் சில விநாடிகள் சிந்தனையோடு தயங்கிய பின் "முன்பும் இப்படி நடந்திருக்கிறது. ஒருவேளை இன்றும் அப்படி ஒரு முயற்சி செய்கிறார்களோ என்னவோ? எதையும் பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரிந்துகொள்ள முடியும். என் அநுமானம் சரியாகவும் இருக்கலாம். முற்றிலும் பிழையாகவும் போய்விடலாம்..." என்றான் முடிநாகன்.

"எந்த அநுமானம்?"

"தயை செய்து சில விநாடிகள் பொறுத்திருங்கள் இளைய பாண்டியரே! நேருக்கு நேர் யாவற்றையும் பார்த்து விடலாம்."

"ஆவலை அடக்க முடியவில்லை! ஆத்திரமும் வருகிறது..."

"ஆவல் காரியத்தைக் கெடுத்துவிடும்! ஆத்திரம் இப்போது இந்த இடத்தில் பயன்படாது."

"இந்தத் தடியர்களுக்கு இரவு வேளையில்கூட உறக்கம், களைப்பு, சோர்வு எதுவுமே கிடையாதா?"

"அதுதான் திருடனும், காமுகனும், மற்றவர்கள் உறங்கும் நேரத்தில்கூட உறங்குவதில்லை என்று காலையில் உங்கள் பாட்டனார் அழகாகச் சொன்னாரே!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/68&oldid=489990" இலிருந்து மீள்விக்கப்பட்டது