பக்கம்:கபாடபுரம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

67


"அவர்களைக் கண்காணிக்க வேண்டிய நம்மையுமல்லவா உறக்கமிழக்கச் செய்கிறார்கள்?" என்று இளையபாண்டியர் சலிப்பும், கோபமுமாகப் பதிலுரைத்தபோது கபாடத்தின் பக்கமே வைத்த கண் மாறாமல் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த முடிநாகன், "இப்போது பாருங்கள் அங்கே என்ன நடக்கிறது தெரிகிறதா?" என்று சுட்டிக் காட்டினான். கொண்டு சென்ற பொதிகளிலிருந்து கபாடத்துக்கு முன்னால் வெண் மேகம்போல் எதையோ கொட்டிக் குவித்தார்கள் அந்த அவுணர்கள்.

"என்ன அது?"

"பஞ்சு இழைகள்."

"பஞ்சைக் கொண்டு என்ன செய்யப் போகிறார்கள் இங்கே?"

"என்ன செய்கிறார்கள் என்றுதான் பாருங்களேன்?"

-முடிநாகனோடு இளையாண்டியனும் அவர்களுடைய விசித்திரச் செயலைக் கூர்ந்து கவனிக்கலானான் . பொதிகளை எல்லாம் அவிழ்த்து உதறியபின் கபாடங்களில் கீழிருந்து வரிசை வரிசையாகக் குமிழ்களில் இணைந்து தொங்கிய வெண்கல மணிகளைப் பக்கத்துக்கு இருவர் வீதம் நிமிர்த்திப் பிடித்து உள்புறமிருந்த நாக்குகளையும் மணிகளின் உடல்களையும் நடுவே பஞ்சு இட்டுத் திணித்து ஒசையெழாதபடி செய்தனர் அவர்கள். நாக்குகள் அடித்துக் கொண்டு மணியோசை எழுப்பா வண்ணம் உள்ளே பஞ்சு இட்டுத் திணித்த பின் மணிகள் எவ்வளவு ஆடினாலும் ஒலி எழாது. ஒலி எழா விட்டால் கதவுகளின் குமிழ்களைப் பற்றிப் பயமின்றி மேலே ஏறி முத்துக்களையோ இரத்தினங்களையோ பெயர்க்கலாம். மிகவும் தந்திரமாக இந்த ஏற்பாட்டைச் செய்யலாயினர் அவுணர்கள். இதைக் கண்டு பரபரப்பும் ஆத்திரமும் அடைந்த இளையபாண்டியன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/69&oldid=489991" இலிருந்து மீள்விக்கப்பட்டது