பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



2. வாழையடிவாழையென
வ.உ.சி. வக்கீலானார்!

பண்டைக் காலத்தில் தமிழகத்தின் மதுரை, நெல்லை மாவட்டப் பகுதிகள் எல்லாம் பாண்டிய மன்னன் செங்கோலில் செழுமையாக இருந்து வந்தன. அறநெறி பிறழாத அரசர்களும், போர்முனையில் புறங்காட்டி ஓடாத வீரர்களும், நாணயம் தவறாத வணிகர் பெருமக்களும், வாய்மையே உயிரென வாழ்ந்த, புலவர் பெருமக்களும், “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்று நம்பி வாழ்ந்த நெறி பிறழாத மக்களும் வாழ்ந்த நாடு. மூவேந்தர் வாழ்ந்த தமிழ்நாடு! அந்நாடுகளுள் ஒன்று பாண்டியர் நாடு!

இத்தகைய புகழ் பெற்ற மண்ணான நெல்லை மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் என்ற சிற்றறூரில்தான் “வரியா? வெள்ளையனுக்கா? தரமாட்டேன்” என்று மறுத்து வீறு கொண்டெழுந்த கட்டபொம்மன் பிறந்தான்!

இதே மண்ணில்தான் ‘ஆற்காட்டு நவாப்பா? உனக்கேன் வரி? எதற்காக நான் கொடுக்க வேண்டும்’ என்று ஏறுபோல முழக்கமிட்ட பூலித்தேவன் என்ற மாவீரன் பிறந்தான்.