பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

கப்பலோட்டிய தமிழன்


வ.உ.சி. மீது தொடுக்கப்பட்ட வழக்கை மாஜிஸ்திரேட் விசாரித்து, அது பொய் வழக்கு, ஜோடனை வழக்கு என்று காரணம் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டார். இந்த வழக்கை நடத்த சிதம்பரத்துக்கு ஆன செலவுகளையும் நஷ்ட ஈடாகத் தருமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். எந்த போலீஸ் அதிகாரி பொய் வழக்கை வ.உ.சி. மீது தொடுத்தானோ அவனுடைய வேலையையும் அவன் இழந்து விட்டான்.

தன் மீது போலீசார் தொடுத்த வழக்கில், நீதித்துறை லஞ்சம் பெற்றுக் கொண்டு பணியாற்றியதை நன்குணர்ந்த சிதம்பரம், ‘நீதித் துறையும் லஞ்சம் வாங்குவதா?’ என்ற கோபத்தில், லஞ்சம் வாங்கிய சப்-மாஜிஸ்திரேட் ஏகாம்பரம் என்பவர் மீது வழக்குத் தொடுத்து, அவருக்கும் தண்டனையைப் பெற்றுத் தந்தார் வ.உ.சி.! மற்ற இரு அதிகாரிகளும் லஞ்சம் பெற்றுள்ளதை சாட்சிகளுடன் நிரூபித்து, அவர்களுக்கும் கடும் தண்டனைகளைப் பெற்றுத் தந்தார் சிதம்பரம்.

தன்மீது அதிகாரிகள் லஞ்சம் பெற்று வழக்குப் போட்டதை நிரூபித்து வ.உ.சி. அவர்களுக்குத் தண்டனைப் பெற்றுத் தந்த சம்பவம், அவரது தந்தை உலகநாதப் பிள்ளைக்கு ஒருவித அச்சத்தை உண்டாக்கியது. ஏனென்றால், போலீஸ்துறை, நீதித்துறை அதிகாரிகளை தனது மகன் பகைத்துக் கொள்வது அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால், தந்தையின் சொற்படி வ.உ.சி. ஒட்டப்பிடாரம் நீதிமன்றத்திலே இருந்து துத்துக்குடி நீதிமன்றத்துக்கு 1900 ஆம் ஆண்டு சென்று பணியாற்றலானார்.