பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

43

திருநெல்வேலி மக்களது விழாவை அறிந்த ஆங்கிலேய அதிகாரிகள் கவலை மிகவும் கொண்டு, தூத்துக்குடி நகரில் 9-ம் தேதியன்று ஊர்வலமோ, பொதுக் கூட்டமோ நடத்தக் கூடாது என்று தடைவிதித்து விட்டார்கள். மாஜிஸ்திரேட் சிதம்பரம்பிள்ளையை வரவழைத்து, விபின் சந்திரபால் விடுதலை விழாக் கொண்டாட்டத்தில் நீர் கலந்து கொள்ளவோ, பொதுக் கூட்டத்தில் பேசவோ கூடாது என்று நேரிலேயே எச்சரித்தார்.

உடனே சிதம்பரம் பிள்ளை மாஜிஸ்திரேட்டைப் பார்த்து, ‘நீங்கள் என்ன சொன்னீர்களோ அதை அப்படியே எழுதிக் கொடுக்குமாறு கேட்டார். ஆனால், மாஜிஸ்திரேட் அதற்கு முடியாது’ என்று மறுத்தார்.

சுதேசி கப்பல் நிறுவனத்தாருக்கும், சிதம்பரம் பிள்ளையின் தீவிரவாத அரசியல் போக்கு அறவே பிடிக்கவில்லை. ஆங்கில அதிகாரிகள் அடக்குமுறையைக் கண்டு தினம் தினம் பயந்து கொண்டே பொழுதைப் போக்கி வந்தனர். அதனால் சுதேசி நிர்வாகத்தினரின் அவசர செயற்குழுக் கூட்டம் திடீரெனக் கூடியது.

நிறுவனத்தின் வளர்ச்சி, லாபம் கருதி, சிதம்பரம் பிள்ளை தீவிரவாத அரசியலில் ஈடுபடக் கூடாது என்று நிர்வாகம் தீர்மானம் செய்தது. இந்த முடிவு கண்டு சிதம்பரனார் மனம் கலங்கினார்.

சுதேசி நிறுவனத்தார்களும், பங்குதாரர்களும் கம்பெனியின் லாப நோக்குதான் முக்கியம் என்று பகிரங்கமாகவே செயற்குழுவில் பேசினார்கள். “நாடாவது காடாவது அதன்று பிரச்சனை. நாடு என்ன துன்பப்பட்டாலும்