பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குன்றக்குடி அடிகளார்13


கம்பனின் இராமகாதை முழுதும் வாழ்வியலைச் சார்ந்த அறிவியல் பொதுளுகிறது. கம்பனின் இராமகாதை ஓர் அரசியல் சாத்திரம், கம்பனின் இராமகாதை ஒரு நெடிய காதை. நீதிகளின் ஊற்று; அறநெறிகளை நாடு முழுதும் எடுத்துச் சென்ற இலக்கியப் பேராறு; உயிர்ப்புள்ள இலக்கியம். கம்பன் கடவுளைப் பாடியது உண்மை. அதுபோலவே விண்ணையும் பாடியது உண்மை. ஆனால் கம்பன் மண்ணை— பூமியை மறக்கவில்லை. மண்ணிற் பிறந்து வாழும் மானுடத்தையும் பாடி இருக்கிறான். மானுடன் வெற்றிபெற வேண்டும் என்பது அவனது கொள்ளை ஆசை! மாந்தரில் பலவகை. பலவகை மாந்தரையும் பாடியிருக்கிறான். மாந்தரின் குறை— நிறைகளை உணர்ந்தவன் கம்பன். ஆயினும் மாந்தரின் குறைகளைக் கண்டு புழுதி தூற்றவில்லை. குறைகளை நீக்கவே முயற்சி செய்திருக்கிறான். குறைகளிடையே நிலவிய நிறைகளையும் கண்டு காட்டக் கம்பன் தவறவில்லை. கம்பனின் இராமகாதையில் ஒரு சமுதாயத்தைக் காண முடிகிறது. இல்லை, பல்வேறு நாடுகள், பல்வேறு சமுதாய அமைப்புக்களைக் காண முடிகிறது. கம்பன் இராமகாதையை இயற்றியது 800 ஆண்டுகளுக்கு முன் ஆயினும், சமுதாய இயக்கத்தில் கம்பன் பல திருப்பு மையங்களைக் காப்பியத்தில் அறிமுகப்படுத்தியுள்ளான். கம்பன் காலம் முடியாட்சிக் காலம். ஆயினும் மக்களாட்சி அறிமுகம் ஆகிறது.

இந்திய கலாசாரத்தில்—தமிழர் சமுதாய வாழ்க்கையில் ‘ஊழ்’ (கர்மாவின் பலன்) மிகவும் முக்கியமான இடத்தை வகித்து வந்திருக்கிறது; இன்றுவரை வகித்து வருகிறது. ‘ஊழிற் பெருவலி யாவுள?’ என்று திருக்குறள் கூறுகிறது. ஆனால், தமிழக வரலாற்றில் ‘ஊழையும் உப்பக்கம் காண்பர்’ என்றும்