பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல், சமூகம்


என்பதை எண்ணி விபீடணனை ஐயத்திற்கு இடமளிக்காத ஒழுகலாறுடையவன்; அறநெறி ஒன்றே அவன் சார்பு என்பதை நிலை நிறுத்த ‘ஐயறு தம்பி’ என்று கம்பன் கூறினான். சீதையை விடுதலை செய்து விபீடணனுடன் உறவு கலந்து வாழவில்லையாயின் நம்முடைய பல வலிமைகளையும் ஒன்று சேர்த்துக் கொண்டு போராட வேண்டும் என்று கும்பகருணன் கூறினான்.


“தையலை விட்டு, அவன் சரணம் தாழ்ந்து, நின்
              ஐயறு தம்பியோடு அளவளாவுதல்
உய்திறம்; அன்று எனின் உளது, வேறும் ஓர்
              செய்திறம்; அன்னது தெரியக் கேட்டியால்”

(கம்பன்-7359)


“பந்தியில் பந்தியில் படையை விட்டு, அவை
       சிந்துதல் கண்டு, நீ இருந்து தேம்புதல்
மந்திரம் அன்று; நம் வலி எலாம் உடன்
       உந்துதல் கருமம்” என்று உணரக் கூறினான்
.

(கம்பன்-7360)

என்ற பாடல்கள் பலகாலும் எண்ணத் தக்கன.

கும்பகருணன் கூறிய இந்த அறிவுரைகளால் இராவணனிடத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதற்குப் பதிலாக இராவணன் போருக்குப் போகப் புறப்பட்டான். கும்பகருணன் இராவணனை விலக்கி விட்டு, தானே போருக்குப் போகத் தலைப்பட்டான். அப்போது, கும்பகருணன், ‘அண்ணா! போருக்குச் செல்கிறேன். நான் வெற்றி பெறுவது உறுதியல்ல. சாவையே தழுவி நிற்பேன். என்னை இராம—இலக்குவர் வெற்றி பெற்றுவிட்டால் உன்னை எளிதில் வெற்றி பெறுவர். ஆதலால், என் மரணத்திற்குப் பிறகாவது சீதையை விட்டுவிடு! அது உனக்கு நன்மை! தவமும் ஆகும்’ என்று கூறி இராவணனிடம் விடை பெற்றுக் கொண்டு போருக்குச் செல்கிறான்.