170 கம்பன் கலை கூறுவதாலேயே சேக்கிழாருடைய கவிதைச் சிறப்பு நன்கு வெளிப்படுகிறது. கல்வி அறிவு இல்லாத வேடன் ஒருவன், தான் அன்றாடம் காண்கின்ற உடும்பை உவமப் பொருளாகக் கூறுவதுதான் பொருத்தமே தவிர வேறு எத்தகைய உயர்ந்த உவமையையும் கையாளுதல் ஆகாது. இதற்கு மாறாகக் கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன் மிக உயர்ந்த பாத்திரமான இலக்குவன் கூற்றில் இத்தகைய தாழ்ந்த ஒர் உவமையைக் கையாளுகின்றான். இந்த இடத்தில் பேசுகிறவன் கல்வி கேள்விகளில் மிக்கவனாம் இராமபிரானின் தம்பியாகிய இலக்குவன் ஆவான். என்றாலும், தமையனுக்குக் கிடைக்க வேண்டிய முடியைச் சிற்றன்னை ஏமாற்றிப் பறித்துவிட்டாள் என்ற எல்லையற்ற கோபம் காரணமாக, "மூட்டாத காலக் கடைத் தீ" என மூண்டு எழுந்து நின்று பேசகின்றான். அவனுடைய கோபம், மேல் உலகத்தையும் சுட்டெரிக்கக் கூடியதாய் மூண்டு நின்ற நிலையை, இராகவனே கண்டு மனம் வருந்தி, இலக்குவன் கொண்ட கோபம் தவறானது என்று பேசுகின்றான். முறை தவறித் தோன்றுகின்ற இத்தகைய சீற்றம், இலக்குவன் போன்ற பண்புடைய ஒருவனுக்குத் தோன்றக்கூடாது என்ற உண்மையை, இராகவன், "உளையா அறம் வற்றிய, ஊழ் வழுவுற்ற சீற்றம், விளையாத நிலத்து, உனக்கு எங்ங்ண் விளைந்தது?" என்று கேட்கும் வினாவிலேயே அடுக்குகிறான். இத்துணை அளவு கோபத்தில் கொதித்து எழுந்த இலக்குவன், பேசுகின்ற பேச்சுகள் மிகத் தாழ்ந்த மனநிலையில் உள்ள ஒருவன் பேசுகின்ற பேச்சுகளாகவே அமைந்துவிட்டன என்பதையும், கமலக்கண்ணன், "வாய் தந்தன. பேசுதியோ, மறை தந்த நாவால்”-அதாவது, "வேதத்தை ஓயாது பாராயணம் செய்கின்ற திருவாயால் வழங்கத் தகாத வார்த்தைகளை நீ பேசலாமா” என்ற கருத்துபடக் கேட்கின்றான். இராமனின் இக்கூற்றுகளால்
பக்கம்:கம்பன் கலை.pdf/181
Appearance