பக்கம்:கம்பன் கலை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 ல் கம்பன் கலை வழியின்றி இரண்டையும் ஏற்றுக்கொள்ளும் நிலையைக் காலாந்தரத்தில் அடைந்திருப்பான். இந்நிலையில் அவனுடைய அறிவு வளரலாயிற்று. உலகையும் அதில் காணப்படும் பொருள்களையும் கண்டு வியப்பில் வாயைப் பிளந்து கொண்டிருந்த நிலை மாறிப் பொருள்களின் இயல்பை ஆயும் அறிவைப் பெற்றான் மனிதன். பொருள்களின் புறத்தோற்றத்தையும், அவற்றின் இயல்புகளையும், நடைமுறையையும் கண்ட மனிதன் அவைபற்றி ஆராயத் தொடங்கினான். அங்கும் அவன் கண்டது முரண்பாடே தூரக் காட்சிக்குக் கறுப்பாக இருந்த பொருள்கள் நெருங்கிச் சென்று காணும்பொழுது வேறு நிறமுடையவாய்க் காட்சி நல்கின. அன்பே வடிவானவை என்றும் கொடுமையுடையன என்றும் அவனால் கருதப்பெற்ற பசுக்களும் புலிகளும், சில சந்தர்ப்பங்களில் முறையே கொடுமையுடையனவாகவும் அன்புடையன வாகவும் இருந்தன. இம் முரண்பாடுகளால் பொருள்களின் இயல்பு பற்றி அவன் கொண்டிருந்த அடிப்படை ஆட்டங் கண்டுவிட்டது. நல்லவை என்று அவனால் கருதப்பெற்றவை, ஒரோவழித் தீயவையாக இருத்தலும் அவன் சிந்தனையைத் துரண்டி விட்டன. இந்நிலையில் மனிதன் தன்னைச் சூழ்ந்துள்ள தன் இனத்தைக் கவனிக்கத் தொடங்கினான். இங்கும் இதே முரண்பாட்டைக் கண்டான். நல்லவர்கள் என்று இவன் கருதி நம்பியவர்கள் தீயவர்களாய்ச் சில சந்தர்ப்பங்களில் காணப்பெற்றனர்; அன்புடையவர் என்று கருதப்பெற்றவர் அன்பிலராய்க் காட்சி நல்கினர். நன்மை, தீமை என்ற பண்புகளிலேயே மனிதன் ஐயங் கொள்ளத் தொடங்கி னான். ஒருவேளை தன் காட்சிதான் தவறானதோ என்றும் பன்முறை சிந்திக்கத் தொடங்கினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/185&oldid=770701" இலிருந்து மீள்விக்கப்பட்டது