பக்கம்:கம்பன் கலை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனின் பிரதிநிதி 45 பிறரும் தம் ஐயந் தெளிந்து நின்னைச் சரணடைவர். எனக்கு உதவுவதன் மூலம் உலகம் முழுவதற்கும் உதவினாய்’ என்ற பொருளும் இதில் கிடைக்கக் காண்கிறோம். சுக்கிரீவன் வாழ்க்கையிலிருந்து நாம் அறிய வேண்டியதும் ஒன்றுண்டு. எதிலும் தெளிவு ஏற்படாமல் சந்தேகத்திலேயே உழலும் சராசரி மனிதன் தனக்கு என்றேனும் உய்கதி உண்டாகுமா என்று கவலைப்பட வேண்டியதில்லை. நமக்கும் உய்கதி உண்டு என்பதை அறிவிக்க, நம் முன்னோடியாக உள்ளான் சூரியன் மைந்தனாகிய சுக்கிரீவன். அடுத்து ஒன்றும் அறியப்படல் வேண்டும். அரைகுறை உறுதியுடனும், நீங்காத சந்தேகத்துடனும் இருக்கும் நம் போன்றவர்களையும் இறைவன் ஏற்றுக்கொள்வானா ? குகனைப் போன்ற 'அன்பே வடிவானவர்களையும், வீடணனைப் போன்ற அறிவே வடிவானவர்களையும் மட்டுமே ஏற்றுக்கொள்வானா? என்ற ஐயத்திற்கு இனி இடமில்லை. இந்த இரண்டு பேர் போன்றவர்கட்கு என்ன இடத்தைப் பரம்பொருள் தருகிறானோ அதே இடத்தை இடைநிலையில் உள்ள நம் பிரதிநிதிக்கும் அளிக்கிறான் என்பது தெளிவு. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/54&oldid=770791" இலிருந்து மீள்விக்கப்பட்டது