பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4


வால்மீகி முனிவர்தான் இராமாயணத்தைக் காவியமாகப் பாடிய ஆதிகவி. அவர் காலத்திலே வழங்கி வந்த இராமகதைகளை எல்லாம் ஒருங்கு திரட்டிக் காவிய வடிவம் கொடுத்தார் வால்மீகி முனிவர் என்கிறார் பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை.

(கம்பன் காவியம் — பக் 152)

ஆதி கவியாகிய வால்மீகி முனிவர் தமது இராமகாவியத்தை இயற்றிய காலம் கி. பி. 438 என்று அறுதியிட்டுக் கூறுகிறார் சென் குப்தா எனும் அறிஞர்[1]

மகா பாரதத்திலே இராம காதையைக் காண்கிறோம். இராமோ பாக்கியானம் எனும் பெயர் பெற்றுளது. இக்கதையை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரருக்குச் சொல்கிறார்,

புத்த ஜாதகக் கதைகளிலே இராமாயணத்தைக் காண்கிறோம். ஜாதகக் கதைகளிலே மூன்று, இராம கதையைக் கூறுகின்றன. இராமரைப் பற்றிய கதையே ஆனாலும் இவை, வால்மீகி ராமாயணத்துக்கு மாறுபட்டவை ஆகும்.

ஜைனர்களும் தங்கள் மதக் கோட்பாடுகளுக்கு ஏற்ப இராமகாதையை அமைத்துக் கொண்டார்கள். ஜைனர்களிடையே இரு பிரிவுகள் உள்ளன. ஒன்று சுவேதம்பர ஜைனம், மற்றொன்று திகம்பர ஜைனம்.

சுவேதம்பரர் என்போர் வெள்ளை ஆடை உடுப்போர். திகம்பரர் என்போர், ஆடையே அணியாதோர். விமல சூரி என்பார் சுவேதம்பரஜைனர். இவர், தம் பிரிவுக்கு ஏற்ப இராம கதையை அமைத்துக் கொண்டார்.


  1. Date of Composition of the Ramayana—Journal of the Department of Letters (Calcutta University) Vol XIX No.3.