பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

99


“குசன் என்பவன் ஓர் அரசன். அவனது புதல்வர் நால்வர். மூத்தவன் பெயர் குசாம்பன். இரண்டாமவன் பெயர் குசநாபன்; மூன்றாமவன் பெயர் ஆதூர்த்தன்; நாலாவது குமாரன் பெயர் வசு.”

“குசாம்பன் கெளசாம்பியைத் தலைநகராகக் கொண்டு அரசு செய்தான். குசநாபன் மகோதயம் எனும் நகரில் இருந்து அரசு செலுத்தினான். ஆதூர்த்தன் தர்மவனத்திலே செங்கோல் செலுத்தினான். வசு என்பவன் கிரிவிரஜன் எனும் நகரிலே ஆட்சி செய்தான்.”

“குசநாபன் நூறு பெண்களைப் பெற்றான். அப்பெண்கள் கட்டழகு வாய்ந்தவர்களாய் பருவச் சிறப்புடன் விளங்கினார்கள்.”

“வாயு தேவன் கண்டான். அவர்கள் மீது மையல் கொண்டான். ஒருநாள். அவர்கள் மலர் பறித்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது வாயு தேவன் அவர்களை அணுகினான். தனது மையலைத் தெரிவித்தான்.”

“எங்கள் தந்தையை அணுகி, உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். அவர் உமது கருத்துக்கு இணங்கி நீர் வார்த்து எங்களை உங்களுக்கு அளிப்பாராகில் பின்னரே நாங்கள் உங்களை அணைவோம்' என்று அவர்கள் கூறினார்கள்.

வாயு தேவன் கோபம் கொண்டான். அவர்கள் அழகு கெட்டுக் கூனிக் குறுகிய வடிவம் கொள்ளுமாறு சபித்தான்.

பெண்கள் நூறு பேரும் கூனிக் குறுகித் தள்ளாடிச் சென்றார்கள். நடந்ததைத் தங்கள் தந்தையிடம் சொன்னர்கள்.