பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110


சகரர் பூமியைக் குடைந்து பாதாளம் சென்ற பள்ளம் கடலாயிற்று. சகரனின் புதல்வர் தோண்டியதால் ஏற்பட்ட கடல் சாகரம் எனும் பெயர் பெற்றது.

தன் பிள்ளைகளுக்கு நேர்ந்த கதியை அறிந்தான் சகரன். மூத்த மகனின் மகனாகிய அம்சுமானிடம் கூறினான். யாகம் தடைபட்டது குறித்து வருந்தினான்.

அம்சுமான் பாதாள உலகம் சென்றான்; முனிவரை வணங்கினான். வருந்தினான். முனிவர் நடந்தவற்றைக் கூறினார். குதிரையைக் கொண்டு போய் யாகத்தை நிறைவேற்றுமாறு கூறினார்.

அம்சுமான் குதிரையைக் கொண்டு வந்தான். பாட்டனிடம் ஒப்புவித்தான். சகரனும் வேள்வி முடித்தான். பேரனாகிய அம்சுமானுக்கு முடி சூட்டி விட்டு விண்ணுலகு சென்றான்.

அம்சுமானுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் திலீபன். திலீபனுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் பகீரதன்.

பகீரதன் என்ன செய்தான்? தன் முன்னோராகிய சசுரபுத்திரர் வெந்து சாம்பலானது கேட்டான். அவர்கள் நல்ல கதி பெறச் செய்வது எப்படி என்று வசிஷ்டரைக் கேட்டான் அப்போது வசிஷ்டர் சொன்னார்.

“திருமால் திருவிக்கிரமனாகத் தோன்றி ஓங்கி உலகளந்த போது” அவரது திருவடி பிரம்ம லோகம் வரை சென்றது. பிரம்ம தேவன் அவரது திருவடிகளைத் தமது கமண்டல நீர் கொண்டு திருமஞ்சன மாட்டுவித்தான். அதுவே கங்கை ஆயிற்று. அவ்வாறு தோன்றிய புண்ணிய தீர்த்தத்தை மீண்டும் தனது கமண்டலத்தில் ஏற்றான் பிரமன்.