பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் சக்திதாசன் சுப்பிரமணியன் என்று சொன்னவுடன் நமக்கு அவர் எழுதிய நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் நினைவிற்கு வரும். முக்கியமாக அவர் எழுதிய ‘கலித்தொகை காட்சிகள்’ ‘குறுந்தொகை காட்சிகள்’ இரண்டும் தமிரறிஞர்கள் டாக்டர் மு. வரதராசனார், அ. ச. ஞானசம்பந்தன் ஆகியோரால் பெரிதும் பாராட்டப்பட்டவை. அவர் எழுதிய ஆன்மீக நூல்கள் பல. விஞ்ஞானம் பற்றி அவர் எழுதிய “உலகம் பிறந்த கதை” “அம்பு முதல் அணுகுண்டு வரை” போன்றவை புகழ் பெற்றவை. வாழ்க்கை வரலாற்றில் பாரதி லீலை - 1938ல் வெளி வந்தது. தமிழகம் அந்த நூலுக்கு நல்ல ஆதரவு தந்தது. பின்னர் வெளியான ‘பாரதி-ஒரு புதுமைக் கண்ணோட்டம்’ பாரதி இலக்கியத்தில் சிறந்த ஆய்வாளர் என்று பெயர் பெற்ற, திரு. ஆர். ஏ. பத்மநாபன் மட்டுமன்றி பலரால் போற்றப்பட்டது. அது போன்றே அவர் தம் ஆசான் திரு. வி. கவை பற்றி எழுதிய, “திரு. வி. க. வாழ்வும் தொண்டும்” என்ற நூலே எல்லோரும் பெரிதும் வரவேற்றனர். திரு. சக்திதாசன் சுப்ரமணியனின் “காந்தி நினைவு” என்ற எங்கள் பதிப்பும் புகழ் மாலை சூடியது.

இப்போது வெளியிடும் அமரர் சக்திதாசன் சுப்பிரமணியனின் “கம்பன் கவித்திரட்டு” என்ற நூலின் முதல் காண்டத்தை, தமிழகம் எப்போதும் போலவே ஆதரிக்கும் என நம்புகிறோம்.