பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48



வையம் என்னை இகழவும் மாசு எனக்கு
எய்தவும் ‘இது இயம்புவது யாது?’ எனில்
பொய்யில் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக் கதை மாட்சி தெரிக்கவே.

“மாசு என்னை வந்து அடையுமே” என்று கலங்குகிறார். அடுத்த கணமே அந்தப் பெருமை மிக்க கதையை எடுத்துச் சொல்வதனால் ஏற்படும் மகிழ்ச்சியை எண்ணி உள்ளம் நிறைகிறார்.

“வையம் என்னை இகழட்டுமே! மாசு எனக்கு உண்டாகட்டுமே! இந்த தெய்வக் கதையை எடுத்துச் சொல்கிற அந்தச் செயல் பெரிது அன்றோ?” என்று மகிழ்ச்சி கொள்கிறார்.

‘பால் கடல் முற்றும் நக்கியே குடித்து விடலாம் என்று எண்ணி நாவினால் நக்கத் தொடங்குகிறதே! இந்தப் பூனையின் அறிவீனம் இருந்தவாறு என்னே! என்னே’ என்று உலகம் இகழ்வது காண்கிறார் கம்பர். உடனே தம்மைப் பற்றிய நினைப்பும் வருகிறது அவருக்கு.

“நம்மையும் இவ்வாறு தானே உலகம் இகழும்” என்று அஞ்சுகிறார்.

சிறுமை வருமோ என்று அஞ்சியவர் மனம் தேறுகிறார்.

“உலகம் என்னை இகழவும் களங்கம் எனக்குண்டாகவும் இந்த தெய்வப் பெருங்கதையைச் சொல்வது எதற்காக என்றால் இதன் பெருமையை எல்லாருக்கும் அறிவிக்கவே” என்கிறார்.