பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73


விபாண்டக முனிவரின் அருளால் ஒரு மான் வயிற்றில் பிறந்தார் கலைக்கோட்டு முனிவர். இவர் பிறக்கும் போதே தலையில் ஒரு கொம்புடன் பிறந்தார். ஆதலின் கலைக்கோட்டு முனிவர் எனும் பெயர் பெற்றார் கலை என்றால் மான், கோடு என்றால் கொம்பு, கலைக்கோட்டு முனிவர் என்றால் மான் கொம்பு முனிவர் என்று பொருள். ரிசிய சிருங்கர் என்றாலும் இவரையே குறிக்கும்.

கலைக்கோட்டு முனிவர் தம் தந்தைக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தார். அவரது தந்தை விபாண்டகர் தவம் செய்து கொண்டிருந்தார்.

கலைக்கோட்டு முனிவர் இருந்த இடமே சிருங்கபுரம் என்றும், சிருங்ககிரி என்றும், சிர்ங்கேரி என்றும் இப்போது வழங்கப்படுகிறது.

அங்க தேசத்தை ஆண்டு வந்தான் உரோம பாதன். உரோம பாதன் என்றால் பாதத்திலே உரோமம் உள்ளவன் என்று பொருள். இவன் உத்தான பாதன் என்பவனின் மகன். இவனது நாட்டில் மழை பெய்யவில்லை. நாடு வறண்டது. மழை வளம் சுரக்க என் செய்வது? என்று பெரியோரைக் கேட்டான் உரோம பாதன்.

“கலைக் கோட்டு முனிவர் இங்கு வந்தால் மழை பெய்யும்” என்று அவர்கள் சொன்னார்கள்.

“கலைக்கோட்டு முனிவர் வருதல் எப்படி? உலக மக்கள் எல்லாரும் விலங்குகள் என்று கருதும் அவர்—பெருந்தவம் புரியும் அவர்—காடு விட்டு இந்த நாடு புகுவரா?” என்று யோசித்தான் உரோம பாதன்.

கணிகையர் சிலரை அனுப்பினான். கலைக் கோட்டு முனிவரை எங்ஙனமேனும் அங்க நாட்டுக்கு அழைத்து வருமாறு கூறினான்.

10