பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2



இராமாயணம் இந்திய எல்லையுள் மட்டும் அடங்கியதோ? இல்லை; இல்லை. கடல் கடந்து சென்றது.

கம்போதியாவிலே இராமாயணத்தைக் காண்கிறோம். அங்கோர்வாட்டிலே உள்ள கலைப் பொக்கிஷங்கள் இராமயணத்தை நமக்கு போதிக்கின்றன.

ஜாவாவிலே உள்ள கலைச் சிற்பங்கள் நம் கண்ணைக் கவர்கின்றன; கருத்தை ஈர்க்கின்றன; இராமாயண நிகழ்ச்சிகளை எடுத்துக் காட்டுகின்றன. ஜாவா நாட்டிலே முதன் முதலாக இராமாயணம் இயற்றப்பட்ட காலம் கி.பி. 929 என்று கூறப்படுகிறது.

சில ஆண்டுகள் முன்பு இராமாயண மகாநாடு ஒன்று மலேசிய நாட்டிலே நடைபெற்றது. இராமாயண நிகழ்ச்சிகளைச் சித்தரிக்கும் இசைக் கூத்துகள் பலவும் அதுபோது நிகழ்த்திக் காட்டப் பெற்றன. இவை மலேசிய கலை வாழ்வில் ஒன்றியவை.

இராமருக்கு என்று எழுப்பப் பெற்ற கோயில்கள் நம் நாட்டிலே உள. அதுவன்றிக் கோயில்கள் பலவற்றிலே இராமாயண நிகழ்ச்சிகள் செதுக்கப் பெற்றிருத்தலும் காண்கிறோம்.

கி. பி. ஐந்தாம் நூற்றண்டிலே கட்டப்பட்டது தேவகார் விஷ்ணு ஆலயம். இதைக் கட்டியவர்கள் குப்த அரசர்கள். இந்த ஆலயத்திலே இராமாயண நிகழ்ச்சிகள் கற்களிலே வடிக்கப் பெற்றுள்ளன. அகல்யை சாபம் நீங்கப்பெற்றதும், சூர்ப்பணகை மூக்கு அறுபட்டதும் சிறப்பாக வடிக்கப் பெற்றுள்ளன. கல் உருவோ, உயிர் ஓவியமோ என்று காண்பவர் வியக்கத்தக்க முறையில் சிற்பி தம் கை வண்ணம் காட்டியுள்ளார்.