பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77


அந்த யாகத் தீயினின்று எழுந்தது ஒரு பூதம்; எரியும் தீப்போன்ற தலைமயிரும், சிவந்த கண்களும் கொண்டு விளங்கியது; கையிலே பொன்தட்டு ஒன்று; ஏந்தி வந்தது. அத்தட்டிலே அமிர்தபிண்டம் ஒன்று இருந்தது. அத்தட்டைப் பூமியிலே வைத்தது; மீண்டும் தீயிலே மறைந்தது.

அந்தப் பிண்டத்தை எடுத்து முறைப்படி பகிர்ந்து தனது தேவியர்க்கு அளிக்குமாறு தசரத சக்கரவர்த்திக்குக் கூறினார் முனிவர். அங்ஙனமே செய்தான் மன்னர் மன்னன். முனிவரை வணங்கினான்; முகமன் பல கூறினான்; முனிவரும் அரசனை வாழ்த்தினார்; தமது ஊர் திரும்பினார்.

நாட்கள் சென்றன, தசரதனின் தேவிமார் மூவரும் கருக்கொண்டனர்.

புனர் பூச நட்சத்திரமும் கடக ராசியும் கொண்ட நன்னாளில் கெளசல்யா தேவி ஓர் ஆண் மகவை ஈன்றாள். அம்மகவுக்கு இராமன் என்று பெயரிட்டார் குல குருவாகிய வசிட்டர்.

மீன லக்கினத்திலே பூச நட்சத்திரம் கூடிய நல்ல நாளிலே கைகேயி தேவி ஓர் ஆண் மகவைப் பெற்றாள். அம்மகவுக்கு பரதன் என்று பெயர் வைத்தார் வசிட்டர்.

ஆயில்ய நட்சத்திரமும் கடக ராசியும் கூடிய நல்ல நாளிலே சுமித்திரா தேவி ஓர் ஆண் மகவு ஈன்றாள். அம்மகவுக்கு லட்சுமணன் என்று பெயர் வைத்தார் வசிட்டர்.

லட்சுமணனைத் தொடர்ந்து மற்றோர் ஆண் குழந்தையைப் பெற்றாள் சுமித்திரை. அக்குழந்தை பிறந்த ராசி சிம்மம் நட்சத்திரம் மகம். இக்குழந்தைக்குச் சத்துருக்னன் என்று பெயரிட்டார் வசிட்டர்.