பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3



கி.பி. ஆறாம் நூற்றாண்டினது என்று அறுதியிட்டுக் கூறப்படுவது பாதாமி வைஷ்ணவ குகைக் கோயில். அங்கே கருங்கல்லால் செதுக்கப் பட்டுள்ளன இராமாயணச் சிற்பங்கள்.

கி.பி. 740ல் மேலைச் சாளுக்கியர் தம்மால் கட்டப்பட்டது விருபாட்சீசுவரர் கோவில். அங்கே சேதுவை அணைகட்டிய நிகழ்ச்சி சித்தரிக்கப் பட்டுள்ளது.

கி.பி எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது கைலாசநாதர் கோவில். எல்லோராவில் உள்ளது. இராஷ்டர கூட மன்னர் கட்டியது. இங்கே அருமையான சிற்பம் காணப்படுகிறது. அதாவது இராவணன் சீதையைத் தூக்கிச் சென்றபோது ஜடாயு எதிர்த்துப் போரிட்ட நிகழ்ச்சி.

இப்படியாக நமது பாரத தேசத்திலே தோன்றிய கவிகள் தங்கள் காவியங்கள் மூலம் இராம காதையை வடித்தார்கள்; மங்காப் புகழ் பெற்றார்கள்; என்றும் நிலை பெற்றார்கள்; மன்னர் தம் ஏவலால் சிற்பிகள் கருங்கற்களில் இராம காதையை வடித்தார்கள். அவை இன்றும் நிலைபெற்று நிற்கின்றன.

இராம கதைக்கு விதை ரிக் வேதத்தில் உள்ளது. ரிக் வேதகாலம் கி. மு. 750 முதல் 1000 வரை ஆகும் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

சீதை எனும் பெயர் ரிக் வேதத்திலே பல இடங்களில் காணப்படுகிறது. சீதை பயிர்த் தொழிலின் தெய்வம். தசரதன், இராமன் என்ற பெயர்களும் ரிக் வேதத்தில் காணப்படுகின்றன. ஜனகன் என்ற பெயர் சதபதப் பிராம்மணத்திலும், தைத்ரீய பிராம்மணத்திலும், காணப்படுகின்றன. ஆனால் இராமாயணம் கதை வடிவில் இல்லை.