பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

தான் நீ போகிறாயே! நேரில் கண்டு கொள். நான் சொல்வது எதற்கு?

தோளையே சொல்லுகேனோ– அவளுடைய தோள் அழகைச் சொல்வேனா? சுடர் முகத்து உலவுகின்ற வாளையே சொல்லுகேனோ? – ஒளி பொருந்திய அவள் முகத்தில் உலவுகின்ற வாள் போலும் கண்களைச் சொல்வேனோ? அல்லவை வழுத்துகேனோ? – மற்றும் சொல்லக்கூடிய அவயவங்கள் பற்றிக் கூறுவேனோ? மீளவும் திகைப்பது அல்லால்– வருணித்துச் சொல்லும்போது மீண்டும் திகைக்கிறேனே அன்றி; தனித்தனி விளம்பல் ஆற்றேன்– அவற்றைத் தனித்தனி எடுத்துச் சொல்ல முடியாதிருக்கிறேன். நாளையே காண்டி அன்றோ– நாளை நீ காணப்போகிறாய் அல்லவா? நான் உனக்கு உரைப்பது என்னோ– நான் சொல்வது எதற்கு.

பாகத்தில் ஒருவன் வைத்தான்;
        பங்கயத்து இருந்த பொன்னை
ஆகத்தில் ஒருவன் வைத்தான்;
        அந்தணன் நாவில் வைத்தான்;
மேகத்தில் பிறந்த என்னை
        வென்ற நுண் இடையை நீயும்
மாகத் தோள் வீர, பெற்றால்
        எங்ஙனம் வைத்து வாழ்தி?

உமையைத் தனக்கு உரியவளாகப் பெற்றான் சிவன். தன் இடது புறம் வைத்துக் கொண்டான். திருமகளைத் தனக்கு உரியவளாகப் பெற்றான் திருமால்; மார்பிலே வைத்துக் கொண்டான். கலைமகளைத் தனக்கு உரிமையாகப் பெற்றான் பிரமன்; நாவிலே வைத்துக் கொண்டான். சீதையைப் பெற்றால் நீ எவ்வாறு வைத்து வாழ்வாய்?