பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39



இவ்வாறு தம் ஐயனைப் புகழ்கிறாள் அந்தச் சூர்ப்பணகை. அபசகுனத்தின் அறிகுறி இங்கேயே தொனிக்கிறது “சீதையைப் பெற்றால் நீ எங்ஙனம் வைத்து வாழ்வாய்?” என்று கேட்கிறாள். “வாழமாட்டாய்; வீழ்வாய்” என்பது தொனிக்கிறது.

மாகத் தோள் வீர– பெரிய வானம் அளாவிய தோள்களை உடைய வீரனே! ஒருவன் பாகத்தில் வைத்தான்– மும்மூர்த்திகளில் ஒருவனாகிய சிவன் தனது மனைவியாகிய உமையை இடது பாகத்தில் வைத்துக்கொண்டான்; ஒருவன்– திருமால்; பங்கயத்து இருந்து பொன்னை– தாமரையில் நின்ற திருமகளை; ஆகத்தில் வைத்தான்– தனது மார்பில் வைத்துக் கொண்டான்; அந்தணன்– பிரமன்; நாவில் வைத்தான்– (தனது மனைவியாகிய கலைமகளை) தனது நாவிலே வைத்துக் கொண்டான்; நீயும் மேகத்தில் பிறந்த மின்னை– மேகத்தில் பிறந்த மின்னலை; வென்ற– வெற்றிகண்ட; நுண் இடையை– நுண்ணிய இடையாளாகிய சீதையை; பெற்றால்– அடையப் பெற்றால்; எங்ஙனம் வைத்து வாழ்தி? - எவ்வாறு வைத்து வாழ்வாய்? (வாழ மாட்டாய் என்ற பொருள் இங்கே தொணிப்பது காண்க.)

இந்திரன் சசியைப் பெற்றான்;
        இருமூன்று வதனத்தோன் தன்
தந்தையும் உமையைப் பெற்றான்;
        தாமரைச் செங்கணானும்
செந்திருமகளைப் பெற்றான்;
        சீதையைப் பெற்றாய் நீயும்
அந்தரம் பார்க்கின், நன்மை
        அவர்க்கு இலை உனக்கே ஐயா.