பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46


செய்தாய் ஏனும்–நீ உன் எண்ணப்படியே இதனைச் செய்தாயேனும்; தீவினையோடும் பழி அல்லாது எய்தாது எய்தாது–பாவத்தோடு பழியல்லாது வேறு எதுவும் உனக்குக் கிட்டாது கிட்டாது; எய்தின்–அப்படியே உன் எண்ணம் நிறைவேறினாலும்; உலகு ஈன்றான்–உலகனைத்தும் படைத்த திருமாலாகிய இராமன் வைதால், அன்ன முனிவர் தம் கொடிய சாபம் போன்ற; வாளிகொண்டு–கூரிய தனது அம்பு கொண்டு; உன் வழியோடும்–உன் குலத்தோடும்; கொற்றம் முடித்து–உன் அரசை அழித்து, உன் குழு எல்லாம்–உன்னைச் சேர்ந்த அரக்கர் கூட்டத்தை எல்லாம்; கொய்தான் அன்றே–பூண்டோடு அழித்து விட்டான் என்றே வைத்துக்கொள்.

மாண்டார் மாண்டார் நீ இனி
        மாள்வார் தொழில் செய்ய
வேண்டா; வேண்டா; செய்திடின்
        உய்வான் விதி உண்டோ?
ஆண்டார்; ஆண்டார்; எத்தனை
        என்கேன்; அறம் நோனார்
ஈண்டார்; ஈண்டார்; நின்றவர்
        எல்லாம் இலர் அன்றோ?

மாண்டார் மாண்டவரே. அவ்வாறு மாண்டவர் தொழிலை நீ செய்ய வேண்டாம்; வேண்டாம் அப்படி உன் விருப்பப்படி நீ செய்வாயானாள் உய்யும் வழி உனக்கு வேறு இல்லை. உலகிலே அரசாண்டவர் எத்தனை பேர்? அறவழியே நிற்காதவர் இவ்வுலகில் இருக்கவே மாட்டார். இவ்வுலகில் நீண்ட காலம் இருந்தவர் எல்லாரும் இறந்து போயினர் அன்றோ?