பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47



மாண்டார் மாண்டார் - இறந்தவர் இறந்து போனவரே; நீ இனி மாள்வார் தொழில் செய்ய வேண்டா வேண்டா - நீ இனி இறப்பவர் செய்யும் தொழிலைச் செய்ய வேண்டாம் வேண்டாம்; செய்திடின் - அவ்வாறு செய்வாய் ஆயின்; உய்வான் விதி உண்டோ? - உய்யும் வழி உண்டோ? (இல்லை) ஆண்டார் ஆண்டார் எத்தனை என்கேன் - உலகை ஆண்டவர் எத்தனை பேர் இறந்தனர் என்பேன்; அறம் நோனார் -அறத்தின் வழியே தன் வாழ்க்கையைச் செலுத்தாதவர்; ஈண்டார் ஈண்டார் - நீடித்து இங்கு இருக்கவே மாட்டார் மாட்டார்; நின்றவர் எல்லாம் - இவ்வுலகில் நீண்ட காலம் இருந்தவர் எல்லாரும்; இவர் அன்றோ - இப்பொழுது இல்லாது இறந்து போயினர் அன்றோ.

நின்றும் சென்றும் வாழ்வன
        யாவும் நிலையா வாய்ப்
பொன்றும் என்னும் மெய்ம்மை
        உணர்ந்தாய்; புலையாள்தற்கு
ஒன்றும் உன்னாய்; என் உரை
        கொள்ளாய்; உயர் செல்வத்து
‘என்றும் என்றும் வைகுதி;
        ஐயா! இனி’ என்றான்.

“ஐயனே! இந்த உலகிலே உள்ள உயிர்கள் எல்லாம் அழியும் தன்மையுடையன நிலைத்து இருப்பன அல்ல; இந்த உண்மையை நீ உணர்ந்துளாய். ஆதலின் இந்த இழிதொழில் புரிய எண்ணாதே. என் சொல்லை ஏற்பாயாக. இப்பொழுது பெற்றுள்ள செல்வத்துடன் என்றென்றும் வாழ்வாயாக” என்றான் மாரீசன்.