பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

அருகே நின்றதுபோல் நின்று திடீரென்று வெகு தொலைவில் சென்றுவிடும்; (ஆதலின் அது) நிதி வழி நேயம் நீட்டும் – செல்வம் உள்ள வழியில் தம் ஆசையைச் செலுத்தும்; மன்றல் அம்கோதை மாதர் – மனம் வீசும் அழகிய மாலை அணிந்த விலை மகளிர்; மனம் என – மனம் என்று சொல்லும்; தகைத்து – தன்மையது ஆயிற்று.

பற்றுவான் இனி அல்லன்; பகழியால்
        செற்று வானில் செலுத்தல் உற்றான் என
மற்ற மாய அரக்கன் மனக்கொளா
        உற்ற வேகத்தின் உம்பரின் ஓங்கினான்.

இனி இராமன் தன்னைப் பிடிப்பதில் கருத்துச் செலுத்த மாட்டான். பகழி ஒன்றால்கொன்று விண்ணுலகு செலுத்துவான் என்று கண்டு கொண்டான் மாரீசன். தனது முழு சக்தியையும் உபயோகித்து வானிலே எழும்பிக் குதித்து ஓடினான்.

அ மாய அரக்கன் – மாயையில் வல்ல அரக்கனான அம்மாரீசன்; இனிப் பற்றவான் அல்லன் – இராமன் இனி என்னைப் பிடிக்க முயலமாட்டான்: பகழியால் செற்று – தன் அம்பினால் என்னைக் கொன்று; வானில் செலுத்தல் உற்றான் – விண்ணுலகு செலுத்தக் கருதியுள்ளான்; என – என்று; மனம் கொளா – மனத்தில் எண்ணிக்கொண்டு; உற்ற வேகத்தின் – தனக்கு உரிய மிக வேகத்துடனே; உம்பரில் ஓங்கினான் – வானில் மேல் எழும்பிச் செல்லலாயினான்.