பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7


இத்தகைய நீ மாற்றாள்‌ மகன்‌ அரசனாவது குறித்துச்‌ சிறிதும்‌ கவலையில்லாது இருக்கிறாயே! அதனால்‌ உனக்கும்‌ பெருந்துன்பமுண்டாகும்‌ என்பதை அறியாது இருக்கிறாயே! சொன்னாலும்‌ கேட்க மாட்டேன்‌ என்கிறாயே!

அரசர்‌ இல்‌ பிறந்து–அரச குடும்பத்தில்‌ தோன்றி; அரசர்‌ இல்‌ வளர்ந்து–அரச குடும்பத்திலே வளர்ந்து; அரசர்‌ இல்‌ புகுந்து– அரச குடும்பத்திலே வாழ்க்கைப்பட்டு; பேர்‌ அரசி ஆன நீ–பெரிய பட்டத்து அரசியாகிய நீ; கரை செயற்கு அரும்‌– கரை காண அரிதாகிய; துயரக்‌ கடலில்‌–துன்பக்‌ கடலில்‌; வீழ்கின்றாய்‌– வீழ்ந்து விடப்‌ போகின்‌றாய்‌; உரை செயக்‌ கேட்கிலை–சொன்னாலும்‌ கேட்க மாட்டேன்‌ என்கிறாய்‌; உணர்தியோ–நீ– யாகவும்‌ உணரவில்லை.

எனக்கு நல்லையும்‌ அல்லை;
        நீ; என்‌ மகன்‌ பரதன்‌
தனக்கு நல்லையும்‌ அல்லை;
        அத்‌ தருமமே நோக்கின்‌
உனக்கு நல்லையும்‌ அல்லை
        வந்து ஊழ்வினை தூண்ட
மனக்கு நல்லன சொல்லினை
        மதியிலா மனத்தோய்‌.

அறிவில்லாதவளே! எனக்கு நல்லது செய்வது போல்‌ ஏதோ சொல்கிறாய்‌. அது எனக்கு நல்லது அன்று; என்‌ மகன்‌ பரதனுக்கும்‌ நல்லது அன்று; உனக்கும்‌ நல்லது அன்று. விதி உன்‌ மதியைத்‌ தூண்ட ஏதோ சொல்கிறாய்‌.