77
“பரக்க என் பகர்வது?
பகழி பண்ணவன்
துரக்க, அங்கு அதுபடத்
தொலைந்து சோர்கின்ற
அரக்கன் அவ்வுரை எடுத்து
அரற்றினான்; அதற்கு
இரக்கம் உற்று இரங்கலீர்;
இருத்திர் ஈண்டு” என்றான்.
“இராமன் ஏவிய அம்பு தைக்கவே சோர்வுற்று அழியும் அந்த அரக்கன் இராமனுடைய குரல் எடுத்துக் கதறிக் கூவினான். ஆகவே அது பற்றி நீவிர் கலங்காதீர்; வருந்தாதீர்; அழாதீர்!” என்று சீதைக்கு ஆறுதல் கூறினான் லட்சுமணன்.
◯◯
பரக்க என் பகர்வது – விரிவாக நான் இனி என்ன சொல்வது? பண்ணவன் – நம் தலைவனாகிய இராமன்; பகழி துரக்க – அம்பு ஒன்றை ஏவ; அங்கு அதுபட – ஆங்கே அது அந்த மான் மீது பட தொலைந்து சோர்கின்ற அரக்கன் – தன் வலி தொலைந்து சோர்ந்து அழிகின்ற அவ்வரக்கன்; அ உரை எடுத்து அரற்றினான் – இராமன் குரலால் அவ் வார்த்தைகளைக் கூறிக் கதறிக் கூவினான்; (ஆதலின்) அதற்கு இரக்கம் உற்று இரங்கலீர் – அதன் பொருட்டு ஏங்கி வருந்தாதீர்; ஈண்டு இருத்திர் – இங்கே கவலையின்றி இருப்பீராக என்று தேறுதல் கூறினான் லட்சுமணன்.
◯◯
என்று அவன் இயம்பலும்
எழுந்த சீற்றத்தள்
கொன்றன இன்னலள்
கொதிக்கும் உள்ளத்தள்