பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80



குளத்திலே மலர்ந்திருக்கிற தாமரைக் காட்டிலே தாவும் அன்னம் போல ஓடினாள் சீதை எங்கே? காட்டிலே புகைவிட்டு எரியும் தீ நோக்கி. எதற்கு? தீயிலே விழுந்து உயிர்விட; அப்போது இளைய பெருமாள் பூமியிலே விழுந்து வணங்கி, சீதையைத் தடுத்து நிறுத்திப் பின்வருமாறு சொன்னான்.

தாமரை வனத்திடை – குளத்திலே உள்ளதொரு செந்தாமரைக் காட்டிலே; தாவும் – தாவியோடும்; அன்னம் போல் – அன்னப் பறவை போல; தூம வெம் காட்டு எரி – புகை சூழ்ந்த காட்டுத் தீயினிடத்திலே; தொடர்கின்றாள் – செல்லத் தொடங்கினாள்.

தனை – அவ்வாறு உயிர் விடச் சென்ற சீதையை; சேம வில் குமரனும் – சீதையைப் பாதுகாத்தல் கருதி வில்லேந்தி நின்ற இளைய பெருமாள்; விலக்கி – தடுத்து; சிறு அடி பூ முகம் – சிறிய அடிகளாகிய தாமரை மலர் முன்னே; நெடு நிலம் புல்லி – பூமியிலே விழுத்து வணங்கி; சொல்லுவான் – பின் வருமாறு சொல்லத் தொடங்கினான்.

“துஞ்சுவது என்னை? நீர்
        சொற்ற சொல்லை யான்
அஞ்சுவென்; மறுக்கிலென்;
        அவலம் தீர்ந்து இனி
இஞ்சு இரும்; அடியனேன்
        ஏகுகின்றனென்;
வெஞ்சின விதியினை
        வெல்ல வல்லமோ?”

நீவிர் உயிர் துறப்பது ஏன்? வேண்டாம்; நீவிர் கூறிய சொற்களுக்கு நான் அஞ்சுகிறேன். உமது கட்டளையை