பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


எனக்கு நல்லையும்‌ அல்லை– எனக்கு நல்லவளும்‌ அல்ல; என்‌ மகன்‌– எனது மகன்‌; பரதன்‌ தனக்கு– பரதனுக்கு; நல்லையும்‌ அல்லை– நல்லவளும்‌ அல்ல; அத்‌தருமமே நோக்கின்‌– அந்த அரச நீதியையே நோக்கினால்‌; உனக்கு நல்லையும்‌ அல்லை– உனக்கு நல்லது செய்து கொள்பவளும்‌ இல்லை; வந்து ஊளழ்வினை தூண்ட– உனது முன்னை வினை தூண்ட; மனக்கு நல்லன– மனத்‌திலே நல்லனவாக இருப்பவற்றை; சொல்லினை– சொன்‌னாய்‌; மதியிலா மனத்தோய்‌– அறிவு இல்லாதவளே

மந்தரை பின்னரும்‌
        வகைந்து கூறுவாள்‌
அந்தரம்‌ தீர்ந்து உலகு
        அளிக்கும்‌ நீர்மையால்‌
“தந்தையும்‌ கொடியன்‌
        நல்தாயும்‌ தீயளால்‌
எந்தையே! பரதனே!
        என்‌ செய்வாய்‌?” என்றாள்‌.

“ஐயோ? பரதா! உன்‌ தந்தையாகிய தசரதனோ உன்னிடம்‌ அன்பின்றி ஒருதலையாக இராமனுக்கு முடி சூட்டுகிறான்‌, இந்த கைகேயியாவது அதைத்‌ தடுத்‌து உனக்கு முடி சூட்ட முயலலாமே, அதுவுமில்லை, சொல்‌லியும்‌ கேட்கவில்லை. இராமன்‌ முடி சூடுதல்‌ கேட்டு மகிழ்கிறாள்‌. இப்படி, உன்‌ தந்தையும்‌ கொடியனாய்‌, தாயும்‌ கொடியவளாய்‌ இருக்கின்றார்களே! பாவம்‌, நீ என்ன செய்வாய்‌!”

இவ்வாறு கூறி பரதனுச்கு இரங்குவாள்‌ போல்‌ நடித்து கைகேயி மனத்தில்‌ விஷவித்து ஊன்ற முயல்‌கிறாள்‌ கூனி.