பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



92


இருந்தவன் “யாவது
        இவ் இருக்கை இங்கு உறை
அருந்தவன் யாவன்?
        நீர் யாரை?” என்றலும்
“விருந்தினர்; இவ்வழி
        விரகு இலார்” எனப்
பெருந் தடங் கண்ணவள்
        பேசல் மேயினாள்

சீதா பிராட்டி அளித்த வரவேற்பைப் பெற்று, இருக்கையில் அமர்ந்த இராவணன் கேட்டான். என்ன கேட்டான்? “இது எவரது உறைவிடம்? இங்கே தவம் செய்பவர் யார்? நீர் யார்?” என்று கேட்டான்.

“ஐயோ பாவம்! கள்ளங் கபடம் அறியாதவர். இவ்வழிச் செல்பவர் போலும் இவ்விடத்துக்குப் புதியவர் போலும்” என்று கருதி சீதா பிராட்டியும் சொல்லத் தொடங்கினாள்.

இருந்தவன்– சீதா பிராட்டியின் வரவேற்பை ஏற்று அவளால் அளிக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்த அந்த இராவண சந்நியாசி; இவ் இருக்கை– இந்த இருப்பிடம்; யாவது– எவருடையது? இங்கு உறை– இங்கே வசிக்கின்ற; அருந்தவன்– அரிய தவசி யாவன்? யார்? நீ யாரை? நீர்– யார்? என்றலும்– என்று கேட்கவும்; இவ்வழி விருந்தினர் – இவர் இவ்விடம் வந்த விருந்தினர்; விரகு இலார்– வஞ்ச மற்றவர்; என– என்று எண்ணி; பெருந்தடங்கண் அவள்– பெரிய விசாலமான கண்களை உடைய சீதா பிராட்டியும்; பேசல்மேயினாள்– பேசத் தொடங்கினாள்.