பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99



தாள் உடை மலர் உளான்
        தந்த அந்தம் இல்
நாள் உடை வாழ்க்கையன்;
        நாரி பாகத்தன்
வாள் உடைத் தடக்கையன்
        வாரி வைத்த வெங்
கோள் உடைச் சிறையினன்;
        குணங்கள் மேன்மையான்.

பிரமதேவனிடம் இருந்து சாகாவரம் பெற்றவன்; சிவபெருமான் கொடுத்த சந்திரகாசம் என்ற வாள் ஏந்திய கையன்; நவக்கிரகங்களையும் சிறையில் அடைத்தவன்; மேன்மையான குணங்களை உடையவன்.

தாள் உடை மலர் உளான்– தண்டினை உடைய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமதேவன்; தந்த– அருளிய; அந்தம் இல்– முடிவிலாத; நாள் உடை வாழ்க்கையன்– வாழ் நாட்களை உடையவன்; நாரி பாகத்தன்– உமையவளைத் தன் இடமருங்கில் உடைய சிவபெருமான்; வாள் உடைத் தடக்கையன் (அருளிய)– சந்திரகாசம் எனும் வாளை உடைய பெரிய கைகளை உடையவன்; வாரி வைத்த– ஒருங்கே திரட்டி எடுத்து வைத்த; வெங்கோள் உடை– நவக்கிரகங்களை எல்லாம் அடைத்து வைத்த; சிறையினன்– சிறைச்சாலையினை உடையவன்; குணங்கள் மேன்மையான்– மேன்மை மிகு குணங்களை உடையவன்.

நவக்கிரகங்களை எல்லாம் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டான் இராவணன். அதைத் தற்பெருமையாக சொல்லிக்கொள்கிறான்.