பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113


கணம்‌ குழை மகளிர்க்‌ கெல்லாம்‌
        பெரும்‌ பதம்‌ கைக்கொள்‌?” என்னா
வணங்கினன்‌; உலகம்‌ தாங்கும்‌
        மலையினும்‌ வலிய தோளான்‌.

உலகினைத்‌ தாங்கி நிற்கின்ற மேரு மலையை விட; வலிமை பொருந்தி தோள்களையுடைய இராவணன்‌ சொல்கிறான்‌:

“அழகுக்கு ஓர்‌ அழகு போன்றவளே! உன் மீது கொண்ட ஆசை நோயானது என்‌ உள்ளத்திலே பொங்குகிறது. அதனால்‌ என்‌ உடல்‌ வாடிப்‌ போயிற்று. எனக்கு உயிர்ப்‌ பிச்சை தருவாய்‌. தெய்வ மகளிர்‌ எல்லாரும்‌ உனக்கு ஏவல்‌ செய்யக்கூடிய அரும்‌ பெரும்‌ பதவியை ஏற்பாய்‌.”

இவ்வாறு சொல்லி சீதாபிராட்டியை வணங்கினான்‌ அந்த இராவணன்‌.

உலகம்‌ தாங்கும்‌ – உலகினைக்‌ தாங்கி நிற்கின்ற; மலையினும்‌ – மலையை விட; வலிய – வலிமை பொருந்திய; தோளான்‌ – தோள்களை உடைய இராவணன்‌; அணங்‌கினுக்கு அணங்கு அனாய்‌ – அழகுக்கு ஓர்‌ அழகு போன்‌றாய்‌; நின்‌ ஆசை நோய்‌ – உன்பால்‌ கொண்ட ஆசை எனும்‌ நோயானது; அகத்துப்‌ பொங்க – என்‌ உள்ளத்திலே பொங்கிக்‌ கொதிப்பு ஏற; உணங்கிய உடம்பினேனுக்கு – (அதனால்‌) வாடிய உடலையுடைய எனக்கு; உயிரினை உதவி – உயிர்ப்பிச்சை அளித்து; உம்பர்‌ – தேவருலகத்‌திலுள்ள; கணம்‌ குழை – திரண்ட குழை எனும்‌ காதணி அணிந்த; மகளிர்க்கு எல்லாம்‌ – தெய்வப்‌ பெண்களுக்கெல்‌லாம்‌; பெரும்‌ பதம்‌ – சிறந்த பெரும்‌ பதவியை; கைக்‌கொள்‌ – நீ ஏற்பாய்‌; என்னா – என்று; வணங்கினான்‌ – பிராட்டியை நமஸ்கரித்தான்‌.

8