பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்நூலின் தொகுப்பாசிரியர்கள் அமரர் சக்திதாசன் சுப்பிரமணியனும் அவர் தம் துணைவியார் திருமதி. ஜலஜா சக்திதாசனும் செய்துள்ள தமிழ்த்தொண்டு போற்றற்குரியது. சிறந்த இலக்கியவாதியான இவ்விருவரும் மூத்த தேசீய எழுத்தாளர்கள்; சுமார் 50 ஆண்டுகள் இலக்கியப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். அமரர் சக்திதாசன் சுப்பிரமணியன் தனியாக எழுதிய நூல்கள் இருபத்தி ஆறு. அவர்தம் துணைவியாருடன் சேர்ந்து எழுதிய நூல்கள் இருபது. திருமதி. ஜலஜா சக்திதாசன் தனியாக எழுதிய நூல் பதினான்கு. தேசீயம், ஆராய்ச்சி. திறனாய்வு, இலக்கியம், அரசியல், விஞ்ஞானம், உலகியல், சமயம், வரலாறு ஆகிய பல்வேறு துறைகளிலும் எழுதிய பெருமை - இவ்விரு ஆசிரியர்களுக்கும் உண்டு. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி என்ற மொழிகளில் எழுதிய சிறப்பும் இவர்களுக்கு உண்டு.

1974ம் ஆண்டு, ‘கம்பன் கவித்திரட்டு’ தொகுக்கப்பட்டது. இந்நூலின் முதல் காண்டம், (பால காண்டம்) 1980ம் ஆண்டு வெளிவந்தது. இந்த முதல் காண்டத்திற்கு தமிழகம் நல்ல ஆதரவு தந்தது.

இப்போது ‘கம்பன் கவித்திரட்டு’ இரண்டாம், மூன்றாம் காண்டங்களை ஒரே தொகுப்பாக வெளியிடுகிறோம். அறிஞர் தம் ஆதரவை வேண்டுகிறோம்.