பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19



நெய் எரி உற்றென நெஞ்சு
        அழிந்து சோரும்;
வையகம் முற்றும் நடந்த
        வாய்மை மன்னன்.

கையொடு கை தட்டுகிறான்; கோபத்தால் உறுமி உதட்டைக் கடிக்கிறான்; ‘மெய் சொல்வதே குற்றம்’ என்று மனம் புழுங்குவான்; விம்முவான்; நெருப்பிலே வார்க்கப்பட்ட நெய் போல் உருகினான், வையம் முழுவதும் வாய்மைக்குப் புகழ் பெற்ற மன்னன்.

வையகம் முற்றும்– பூமி முழுவதும்; நடந்த புகழ் சென்ற; வாய்மை மன்னன்– சத்தியசீலனாகிய தசரத மன்னன்; கையொடு கையைப் புடைக்கும்– அங்கையிலே புறங்கை மடக்கிக் குத்திக் கொள்வான்; வாய் கடிக்கும்– உதட்டைக் கடிப்பான்; மெய் உரை குற்றம்– மெய் பேசுதல் குற்றம்; என– என; புழுங்கி– மனம் புழுங்கி; விம்மும்– விம்முவான்; நெய் எரி உற்று என– நெருப்பிலே வார்க்கப்பட்ட நெய் போல; நெஞ்சு அழிந்து– மனம் உருகி; சோரும்– சோர்வு அடைவான்.

நாகம் எனும் கொடியாள்
        தன் தாவின் ஈந்த
சோக விடம் தொடரத்
        துணுக்கம் எய்தா
ஆகம் அடங்கலும் வெந்து
        அழிந்து அராவின்
வேகம் அடங்கிய வேழம்
        என்ன வீழ்ந்தான்.