பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23



அந்த இலட்சுமணன் எந்நிலையில் இருந்தான் என்பதை கம்பர் இங்கே நமக்குச் சொல்கிறார்.

கண்ணில்கடைத்தீ உக
        நெற்றியில் கற்றை நாற
விண்ணில் சுடரும் சுடர் வீய,
        மெய் நீர் விரிப்ப
உள் நிற்கும் உயிர்ப்பு எனும்
        ஊதை பிறக்க நின்ற
அண்ணல் பெரியோன் தனது
        ஆதியின் மூர்த்தி ஒத்தான்.

இலட்சுமணனுடைய கண்களில் இருந்து தீப்பொறிகள் பறந்தன. எத்தகைய தீப்பொறி ஊழித் தீ போன்ற தீப்பொறிகள். புருவ மயிர் கற்றைகள் நெற்றிக்கு ஏறின. உடம்பில் வியர்வை பொங்கிற்று. சண்டமாருதம் போல் சீறினான். தனது பழைய உருவாகிய ஆதிசேஷனைப் போல் விளங்கினான் இலட்சுமணன்.

கண்ணில் கடைத் தீ உக– கண்ணில் ஊழித் தீப்போன்ற தீப்பொறிகள் சிந்த; நெற்றியில் கற்றை நாற– புருவ மயிர் கற்றைகள் நெற்றியில் சென்று விளங்க; விண்ணில் சுடரும் சுடர் வீய– வானில் விளங்கும் சூரியன் ஒழிய; மெய் நீர் விரிப்ப– உடம்பிலே வெள்ளம் போல் வியர்வை பெருகிட; உள் நிற்கும் உயிர்ப்பு எனும் ஊதை பிறக்க– உடம்பின் உள்ளே நிற்கின்ற உயிர்ப்பு என்கிற சண்டமாருதம் தோன்றவும்; அண்ணல் பெரியோன்– பெருமை மிகு பெரியோன் ஆகிய இலக்குவன்; தனது ஆதியின் மூர்த்தி ஒத்தான்– தனது பழைய உருவாகிய ஆதிசேஷனை ஒத்தான்.