பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32


தம்பி நின்றானை நோக்கித்
        தலைமகன் தனிமை நோக்கி
அம்பியின் தலைவன் கண்ணீர்
        அருவிசோர் குன்றில் நின்றான்.

ஓடங்கள் வைத்திருக்கும் தலைவனாகிய குகன் எப்படிப்பட்டவன்? யானைக் கூட்டங்கள் சுற்றிக்கொண்டு இருப்பன போல் சுற்றுகின்ற இனத்தாருடையவன்; நாணேற்றிய வில்லினை உடையவன்; அந்த வில்லினைக் கையில் ஏந்தி இரவு முழுவதும் உறக்கம் கொள்ளாமல் காவல் புரிகிறான்.

இராமன் புல் தரையில் படுத்திருப்பதைப் பார்க்கிறான்; அருமை தம்பியாகிய இலட்சுமணன் தன்னந்தனியனாக நின்றுக் கொண்டு காவல் புரிவதைக் காண்கிறான்.

கண்ணீர் அருவிபோல் பெருக்கெடுத்து ஓட நிற்கிறான்.

அம்பியின் தலைவன்– ஓடங்கள் வைத்திருக்கும் தலைவனாகிய குகன்; தும்பியின் குழாத்தில் சுற்றும் சுற்றத்தன்– யானைக் கூட்டம்போல் சுற்றிக் கொண்டுள்ள இனத்தார் உடையவன்; தொடுத்த வில்லன்– நாணேற்றிய வில்லினை உடையவன்; வெம்பி வெந்து அழியா நெஞ்சினன்– வருந்திக் கொதித்து நிலை குலையும் மனம் உடையவன்; விழித்த கண்ணன்– உறக்கமும் கண்கொட்டுதலும் இன்றி விழித்திருக்கும் கண்களை உடையவனாகி; தம்பி நின்றானை நோக்கி– நிற்கின்ற தம்பியைப் பார்த்து; தலைமகன் தனிமை நோக்கி– இராமன் தரையிலே படுத்திருக்கும் தன்மையையும் பார்த்துக் கண்ணீர் சொரிந்தான்.